நீதிமுறை அமைப்பிலேயே கோளாறு

Rate this item
(0 votes)

தமிழர்கள் (திராவிடர்கள்) ஆகிய நமக்குள்ள ஆதரவற்ற நிலையையும், மானமற்ற நிலையையும், இழிவு நிலையையும் நிரந்தரப்படுத்தி சிறிதும் மாற்றம் அடைய முடியாமல் பாதுகாப்பதற்கு கோயில், மதம், மத நடப்புகளின் நிர்ப்பந்தம் ஆகியவை, எப்படி இருக்கின்றனவோ, அதுபோலவே இன்றைய நிலைமையில் இந்த அய்க்கோர்ட்டுகளும், வக்கீல்களும் இருந்து வருகின்றன. இவை இதுபோல் இருந்து வரும் வரையிலும், நம் நிலை ஒரு சிறிதும் மாறப்போவதில்லை என்பதோடு, நம் இழிநிலை வளர்ந்து கொண்டே வருகிறது! அய்க்கோர்ட் நீதிமன்றங்கள் - வக்கீல்கள் இந்த ஸ்தாபனங்கள் நம் பரம்பரை எதிரிகளான பார்ப்பனர் கையிலும், பார்ப்பனர் ஆதிக்கத்திலும் இருந்து வருவதால் நம்முடைய முயற்சிகள் எதுவும் பலன் தராமலே போகின்றன. ஆகையால் இந்த நிலையை மாற்றவேண்டும். முடியாவிட்டால் அழிக்க வேண்டும்.

சட்டம் நீதிக்கு ஏற்பட்டதல்ல. ஒரு கூட்டத்தின் பாதுகாப்புக்கு ஏற்பட்டது. ஆதலால் அதில் பரிகாரத்துக்கு மார்க்கம் காண முடியாது. நீண்ட நாளாகப் பார்ப்பன ஆதிக்கம், ஏகபோகமாய் எல்லாத் துறைகளிலும் இருந்து வந்ததனால் அவர்களது ஏகபோக உரிமைக்கு ஏற்றபடி சட்டம் செய்துகொண்டு அச்சட்டத்தைக் காட்டி நம்மைப் பார்ப்பனர்கள் இதுவரை அழுத்தியே வந்திருக்கிறார்கள் என்பது மாத்திரமல்லாமல், இன்னமும் அழுத்தவே துணிகிறார்கள் சட்டப்படி.

 காலஞ்சென்ற பட்டேல் சொன்னார் “சட்டம் ஒரு கழுதை” என்று. அதாவது முன்னாலே போகிறவன் எப்போதும் தப்பித்துக் கொள்வான். பின்னாலே போகிறவனுக்குத்தான் உதை விழுந்து கொண்டிருக்கும். அதைப் பயன்படுத்தும் முறையிருக்கிறதே அது நமக்கு இன்னமும் கேடு உண்டாகிறத் தன்மையில்தான் உள்ளது.

சட்டத்தை எழுதினவன் பார்ப்பான். அந்த சட்டத்தை அமல் நடத்துகிறவன் பார்ப்பான். நிர்வாகத் துறையில், நீதித்துறையில் பார்ப்பனன் ஆதிக்கமே இருப்பதால் அது நமக்கு மேலும் மேலும் கேட்டையே அளித்து வருகிறது. கேடாகவே இருக்கிறது. அந்த வாய்ப்பால் நம் ஆட்கள் இரண்டொருவர் இருந்தாலும்கூட, அவர்கள் பார்ப்பனர்களுக்கு அடிமையாகவேதான் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் தங்கள் சுயநல வாழ்வு கெட்டுவிடும். அதனால் நம்மவர்களும் வாலை அடக்கிக்கொண்டு பார்ப்பனர்களுக்கு ஏற்றபடி நடந்து விடுகிறார்கள். அதற்காகத்தான் நாங்கள் பாடுபட வேண்டியிருக்கிறது. இந்த முயற்சியில் நமக்கு என்ன கேடு வருவதானாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் கேட்டை ஒழிக்க நாம் துணிந்து பாடுபட வேண்டியிருக்கிறது.

முதலாவது பார்ப்பானிடத்தில் பார்ப்பன இனக் கட்டுப்பாடு, இன உணர்ச்சி இருக்கிறது. நம்மிடத்திலே அது இல்லை. நம்மில் ஒவ்வொருவனும் அவனவன் குடும்பம், சொத்து, வருமானம், பதவி இதைப் பற்றிக் கவலைகொண்டு அலைவதைத்தவிர, நம் இன நலத்தில் லட்சியம் இல்லாமல் இருக்கிறான். இதை தெரிந்துதான், பார்ப்பான் எது செய்தாலும் கேட்க நாதியில்லை என்று கருதி, நம்மை ஒழித்துக் கட்ட வேண்டுமென்றே கருதிக் கொண்டு துணிந்து வேலை செய்கிறார்கள். அதை எதிர்க்க நம் கழகம் ஒன்றுதான் இருக்கிறது. மற்றவர்களால் இது மாதிரி காரியங்களில் பிரவேசிக்கிறது என்பது ரொம்ப கடினமான காரியமாகும்.

அய்க்கோர்ட் ஜட்ஜு என்றால், ரொம்பப் பெரிய மனுஷர்கள் என்று கருதுவதுண்டு. வெள்ளைக்காரன் இதனால்தான் ஜட்ஜை கடவுளுக்குச் சமமாக்கி (My lord) என்று அழைக்கிறான். நீதிபரிபாலனம் செய்வதில் “கடவுளுக்கு”ச் சமமானவர்கள் என்ற கருத்தில் அவன் வைத்திருந்தான். அந்த மாதிரி இடத்தில் எப்படி இருக்க வேண்டும்? காலித்தனமான கோர்ட்டுக்குத் தேவை இல்லாத வகையில் எல்லாம், ரொம்பக் காலித்தனமாக நடந்து கோர்ட்டின் பெருமையைக் கெடுத்து வருகிறார்கள். கோர்ட்டு இப்படியே இருக்குமானால் நம் கதி என்னாவது?

இந்த மாதிரியான பார்ப்பனர்களிடமல்லவா நம் தலையெழுத்து இருந்து வருகிறது? அதுவும் பார்ப்பானுக்கும் நமக்கும் எல்லாத் துறையிலும் பெரிய போராட்டம் நடக்கிற இந்த நேரத்திலே இப்படி என்றால், நாம் எப்படி இதை சகித்துக் கொள்ள முடியும்? அதிலும் நம்மவர்கள் மந்திரிகளாக வந்து நம் மக்களுக்கு நன்மை செய்து - பொது ஜன செல்வாக்குடன் மக்களிடம் நல்ல மதிப்போடு இருக்கிறார்கள் என்றவுடன், மறுபடியும் எங்கு இவர்கள் பதவிக்கு வந்து விடுவார்களோ என்று கருதி, அதை ஒழித்துக் கட்டுவதற்காக இப்படியெல்லாம் பார்ப்பனர்கள் பார்ப்பன வக்கீல்கள், நீதிபதிகள் செய்கிறார்கள் என்கிறபோது, நம்மை மீறி அடக்க முடியாத ஆத்திரம் வருகிறது. ஆகவேதான் ஆத்திரம் தீரப் பேசிவிட்டு இரண்டிலொன்று பார்த்து விடலாம் என்று தோன்றுகிறது.

கொஞ்ச நாளைக்கு முன்னால் டெல்லியில் ரயில்வே மந்திரி திரு.ஜகஜீவன்ராம் ரெயில்வே இலாகாவில் உத்தியோகத்திற்கு நியமனம் செய்வதில் எப்படித் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி ஒதுக்கப்படுகிறதோ, அதே தன்மையில் அவர்களுக்குப் புரோமோஷன் கொடுப்பதிலும் கூட அதே சலுகை காட்டப்படவேண்டும் என்று, இந்தியா பூராவுக்கும் ஒரு உத்தரவு போட்டார். நம்நாட்டுப் பார்ப்பனர் (திரு.ரெங்காச்சாரி) என்பவர் சென்னை அய்க்கோட்டில் கேசு போடச் செய்து அதை ஒரு பார்ப்பன ஜட்ஜ் விசாரித்து அந்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு எழுதி விட்டார். அதே மாதிரி இந்த ஊரில், கலெக்டராக ரொம்ப நல்ல பேருடன் இருந்த திரு.மலையப்பனைப் பற்றி எப்படி இரண்டு பார்ப்பன நீதிபதிகளும் தாறுமாறாக எழுதி, அவர் வளர்ச்சியைக் கெடுத்துவிட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நேற்று நடை-பெற்ற திரு.அழகிரிசாமி (சர்க்கார் வக்கீல்) கேசிலே திரு.பாலகிருஷ்ணய்யர், திரு.ஜெகதீச அய்யர் தீர்ப்பு எழுதியது பற்றித்தான் இப்போது விவகாரம்.

சாதாரணமாக இந்த ஊரிலே நான் பிள்ளையார் பொம்மையை உடைச்சதுக்காக ஒரு ஆள் என்மீது கேசு போட்டார் அதுமுல்லே மாஜிஸ்திரேட் கோர்ட்டிலே தள்ளுபடியாச்சு, அதற்குப்பிறகு அப்பீலில்! சப்-ஜட்ஜ் கோர்ட்டிலும் தள்ளுபடி ஆச்சு. பிறகு ஜில்லா கோர்ட்டிலும் தள்ளுபடி ஆச்சு. அய்க்கோர்ட்டிலும் இதை விசாரித்த நீதிபதி இதைத் தள்ளிவிட்டார். இதற்கு அப்பீலுக்கும் அனுமதி மறுத்துவிட்டார். கடைசிக் கோர்ட்டான (டெல்லி) சுப்ரீம் கோர்ட்டுக்குப் போச்சு, அங்கே தீர்ப்பு சொல்லும் வாய்ப்பு பார்ப்பானுக்கு இருந்தது. உடனே கீழே 3-4 கோர்ட்டுகள் சொன்ன தீர்ப்புகள் தப்பு என்று சொல்லி, சட்டப்படிக் குற்றம் என்று தீர்ப்பு எழுதிவிட்டானே! சாதாரணமாக கீழே உள்ள கோர்ட்டிலே இப்படி இரண்டு, அப்படி இரண்டு என்று தீர்ப்பு சொல்லியிருந்தாலும் இப்படி சுப்ரீம் கோர்ட்டிலே தீர்ப்புச் சொல்லுவதில் கொஞ்சமாவது நியாயம் இருக்கமுடியும்? கீழே மூணு 4 கோர்ட்டிலே எழுதிய தீர்ப்பு என்னாவது? இந்தத் தீர்ப்பு எதுக்குப் பயன்படும்? நம்மமாதிரி காரியங்களைப் பண்ணுகிறவர்களை அடக்கத்தான் உதவுமே தவிர, பிள்ளையார் பொம்மையை உடைக்கிறவனையோ, சரஸ்வதி படத்தைக் கிழக்கிறவனையோ ஜெயிலில் போடுவதற்காக உதவும்? இப்படி அவன் கிட்டே பலம் இருக்கிறது. அதனால் நீதிமுறைக்கேட்டிற்கு இருக்கிறது காரணம் அமைப்பிலேயே கோளாறு காணப்படுகிறது.

Read 61 times

Like and Follow us on Facebook Page

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.