Print this page

மாஜி ஜட்ஜி சர்.டி. சதாசிவய்யர் (குடி அரசு - இரங்கலுரை - 27.11.1927)

Rate this item
(0 votes)

சர். டி. சதாசிவய்யர் இறந்ததைக் கேட்டு மனவருத்தம் அடைகின்றோம். மனிதனுடைய சராசரி யோக்கியதைக்கும் நாணயத்திற்கும் மேற்பட்ட அந்தஸ்தும் ஒழுக்கமும் உள்ளவர். தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்குள் எந்த ஒரு பெரிய அதிகாரியாவது கூடிய வரையிலும் கண்ணியமாயும், நாணயமாயும் தனது அதிகாரத்தை செலுத்தியவர் உண்டா என்கின்ற ஒரு கேள்வி பிறக்குமானால் அதற்கு சர். சதாசிவம் என்றே சொல்லுவோம்.

ஜனசமூக சமத்துவத்திற்கு, எந்த ஒரு பார்ப்பனராவது கூடிய வரையில் சம்மதித்தவர் உண்டா? என்கின்ற கேள்வி பிறக்குமானால் அதற்கு சர். சதாசிவம்தான் என்கின்ற விடையே பகர்வோம்.

 

எனவே, இப்பேர்ப்பட்ட ஒரு பெரியார் இம்மண்ணுலகில் மறைந்தது பற்றி யாரும் துயருறாமல் இருக்க முடியாது என்பதோடு சர். சதாசிவத்தினிடமும் அவரது குடும்பத்தாரிடமும் மிகுதியும் அன்பும் மரியாதையும் விசுவாசமும் கொண்டுள்ள ஸ்ரீமான் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அவர்களுக்கும் நமது ஆறுதலை சமர்ப்பிக்கின்றோம்.

(குடி அரசு - இரங்கலுரை - 27.11.1927)

 ***

சேலம் தென்ஆற்காடு ஜில்லாக்கள்

சேலம் ஜில்லாவிலும் தென்னாற்காடு ஜில்லாவிலும் மகாநாடு விஷயமாக எவ்வித பிரஸ்தாபமும் காணப்படுவதில்லை. பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுப் பேச்சை ஆரம்பித்தால் ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாத பிரமுகர்களின் பதவி போய்விடுமோ என்னமோ என்று பயப்படுவதாகக் காணப்படுகின்றது. தமிழ்நாடுகளில் இப்படி பயந்து கொண்டு மதில் மேல் பூனையாய் இருந்த காரணத்திற்காகவே பல பிரமுகர்களுக்கு இருந்த பதவி கூட போய்விட்டதாக நாம் அனுபவத்தில் அறிந்து வருகின்றோம். ஆதலால் பதவியை சதா சர்வகாலம் கட்டிக்கொண்டு அழாமல் தாங்கள் எந்த முத்திரையில் இந்த பதவிகளுக்கு வந்தோம் என்பதைக் கவனித்து சற்று கண் விழித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - செய்தி விளக்கம் - 27.11.1927)

 
Read 65 times