Print this page

பார்ப்பனரல்லாதார் பிரசாரமும் மகாநாடுகளும் சங்கங்களும். (குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.01.1927)

Rate this item
(0 votes)

இம்மாதம் 15-ந்தேதி வாக்கில் கோயமுத்தூரிலாவது மதுரையிலாவது பார்ப்பனரல்லாதார் பிரசாரத்திற்காக வேலைக் கமிட்டி ஒன்று கூட்டி பிரசாரம் ஆரம்பிக்க வேண்டுமென்று எழுதியிருந்தோம்.   சில கனவான்கள் அதை  ஒப்புக்கொண்டு தங்களாலான உதவி செய்வதாகத் தெரிவித்தும் இருக்கிறார்கள்.  ஆனால், ஸ்ரீமான் ஞ.கூ. ராஜன் அவர்கள் சென்னையிலே தென் இந்திய நல உரிமைச் சங்கத்தின் நிர்வாகக் கூட்டம் ஒன்று ஏற்படுத்துவதாகவும் அதற்குப் பிறகு இதைப் பற்றி யோசிக்கலாம் என்பதாகத் தெரிவித்திருப்பதாலும் குறிப்பிட்ட கூட்டம் கூட்டுவதை ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.  தவிரவும் பல இடங்களிலிருந்து ஜில்லா, தாலூகா, கான்பரன்சுகள் கூடப் போவதாகவும், பல இடங்களில் பார்ப்பனரல்லாதார் சங்கமும், பார்ப்பனரல்லாதார் வாலிப சங்கமும், சுயமரியாதைச் சங்கமும் ஸ்தாபிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்ட கடிதங்கள் மிகுதியும் வந்து கொண்டு இருப்பது பற்றி நமக்கு மிகவும் சந்தோஷமே.

  ஆனால், ஒவ்வொன்றுக்கும் அக்கிராசனம் வகிக்கவும், துவக்க விழா நடத்தவும் நாயக்கரே வரவேண்டுமென்று எதிர்பார்ப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்பதை தெரிவித்துக் கொள்ளாமலிருக்க முடியவில்லை.  சங்க ஸ்தாபனங்களுக்கு அந்தந்த ஜில்லாவில் உள்ளவர்களில் முக்கியமானவர்களைக் கொண்டே செய்து கொள்வது நலம் என்றும் அநுகூலம் என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மகாநாடுகளுக்கு தலைமை வகிக்கவும் நாம் முன் எழுதியபடி அரசியலில் எவ்வித கொள்கை உடையவர்களாயிருந்தாலும் நிர்மாணத் திட்டத்தையும் சிறப்பாக சுயமரியாதைத் திட்டத்தையும் ஒப்புக் கொள்ளுகிற பார்ப்பனரல்லாத கனவான்கள் யாரையும் அக்கிராசனம் வகிக்கக் கேட்டுக்கொள்ளலாம் என்று மறுபடியும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

  நாயக்கருக்கு சாவகாசம் கிடைத்தாலும் மகா நாட்டுக்கு விசிட்டர் முறையில் அவசியம் வரக் காத்திருக்கிறார் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம்.  அதோடு பார்ப்பனரல்லாத தலைவர்களான  கனவான்களும் எந்த மகாநாட்டுக்காவது அழைக்கப்பட்டால் அரசியல் காரணத்தை பிரமாதப்படுத்திக் கொண்டு வர மறுக்காமல் சௌகரியப்பட்டவர்கள் அவசியம் வேண்டுகோளை ஒட்டிக்கொண்டு விஜயம் செய்ய வேண்டுமாயும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.01.1927)

 

 

 
Read 61 times