Print this page

பார்ப்பனர்களின் ஒற்றுமை (குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.01.1927)

Rate this item
(0 votes)

கொஞ்ச நாளைக்கு முன் இந்தியாவிலிருந்து இந்தியர்களின் ஊழியராகவும், ஒரு இந்தியராகவும், இந்துவாகவும் உள்ள ஸ்ரீமான் சர்.டி. விஜயராகவாச்சாரியார் இந்திய பிரதிநிதியாக கனடாவுக்கு அனுப்பியதும் அங்கு போய் தென்னை மரம் இருக்கும் வரை குடித்துத்தான் தீருவோம்.  பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தையே இந்தியர்கள் விரும்புவதோடு, இதைக் கடவுள் அனுப்பியதாக இந்தியர்கள் பாவிக்கிறார்கள் என்றும், ஆங்கில நாகரீகத்தையே இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்றும், அதற்கு உதாரணமாக எனது குமாரத்தியே தலை மயிரைக் கத்தரித்துக் கொண்டிருக்கிறாள் என்றும் சொன்னதாக பத்திரிகைகளில் வந்தது ஞாபகமிருக்கும். அதையே ஸ்ரீமான் சு.மு. ஷண்முகம் செட்டியார் அவர்களுக்கு திருப்பூர் முனிசிபல் சங்கத்தார் வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுத்த காலையில் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் எடுத்துச்சொல்லி நமது ஸ்ரீமான் செட்டியார் அப்படிப் பேசாமல் சுதந்திரத்தோடும் ஆண்மையோடும் பேசினதாக குறிப்பிட்டிருந்தார்.

இதை மறுப்பதற்கு, இதில் யாதொரு சம்பந்தமும் இல்லாதவரும் இன்னமும் ஒத்துழையாதாரென்று வேஷம் போட்டுக்கொண்டிருப்பவருமான ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் மகாத்மாவின் “யங் இந்தியா” பத்திரிகையைப் பிடித்து அதில் மறுப்பெழுதி உலகமெல்லாம் பரவச் செய்திருக்கிறார் என்றால் பார்ப்பன ஒற்றுமை எவ்வளவு தூரம் பதிந்திருக்கிறது?  மழையில்லாமல் போனதற்கும், ரயில்வண்டி சார்ஜ் உயர்ந்ததற்கும், வெயில் அதிகமாய்க் காய்வதற்கும் பனகால் ராஜாதான் காரணம்,  ஜஸ்டிஸ் கட்சிதான் காரணம் என்று தான் பிறரைச் சொல்லும்படி செய்வதிலும், பிறரை நம்பும்படி பிரசாரம் செய்வதிலும் உடந்தையாயிருப்பவர்,  தன் இனத்தாரைக் காப்பாற்றுவதில் எவ்வளவு கவலை எடுத்துக்கொள்ளுகிறவர் என்பது கவனிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.  பார்ப்பனரல்லாதாரில் சிலரின் யோக்கியதையையோ சொல்ல வேண்டியதில்லை.  எதை வேண்டுமானாலும் விற்று வயிறு வளர்க்கத் தயாராயிருக்கிறார்கள். என்றுதான் பார்ப்பனர் சூழ்ச்சி அறியவும் பார்ப்பனரல்லாதார் ஒற்றுமையாயிருக்கவும் யோக்கியதை வருமோ தெரியவில்லை.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.01.1927)

 

 

Read 66 times